Wednesday, 30 July 2014

வாழ்க்கை இரகசியம்.



ஒரு வழிப்பயணம்!

ஒருவொரு நொடியும் உன்னோட வயது
ஒருவழிப் பயணம் ஓடிக்கொண் டிருக்கு.
கடந்து தொலையும் காலம் வராது.
தொடர்ந்து முயன்றால் தோல்வி தராது.

வந்தது தெரிந்தது போவது எங்கே
வாழ்க்கையின் இரகசியம் புரியலையோ!
வாழ்ந்தோமென்ற அடையாளம் தானே
வரவா செலவா விளங்கலையோ!

காலம் உந்தன் கணக்கை எழுதுது.
நாளும் அந்த வழக்குத் தொடருது.
செலவும் வரவும் பாவ புண்ணியம்
உலகம் கூறும் முடிவும் நிச்சயம்.

இளமை இருக்கு நாற்பது வரைக்கும்.
வளமை பெருக்கு வாழ்வது நிறைக்கும்.
அப்புறம் முதுமை அதுஉனைக் குறைக்கும்.
செப்புற உறவும் புறமனை ஒதுக்கும்

வீழ்ந்தே கிடந்தால் விறகாய் சாகும்.
வீழ்ந்து எழுந்தால் அனுபமாகும்.
வாழ்ந்தவர் வாழ்க்கை படிப்பினையாகும்
வாழ்ந்து பார்த்தால் சரித்திரமாகும்.

உண்ணவும் உறங்கவும் பிறக்கவுமில்லை.
மண்ணும் சுமப்பதும் புதைக்கவுமில்லை.
எண்ணமும் செயலும் இறக்கவுமில்லை.
என்பதும் மறந்தால் உலகமுமில்லை..

கொலையும் கொள்ளையும் வெற்றியல்ல.
விலையின்றி சாபம் முற்றுவதல்ல.
உனக்கென ஒருதுளிக் கண்நீர்வீழ்ந்தால்
பிணமென உன்னை இகழாது உலகம்.

உழைப்பது ஒன்றே உயர்வின் சின்னம்.
பிழையற்ற வாழ்வே பெருமையின் வண்ணம்.
கனவுகள் விதித்து தன்னை நினைத்து
உணர்வுகள் மதித்து உன்னை உயர்த்து.

செவ்வழி வாழும் முறையுருவாக்கு!.
ஒவ்வொரு நாளும் வரலாறாக்கு!.
அவ்வழி உணர்ந்து பின்னவர் வாழ!
எவ்விதம் அடையாளம் உனைநீ ஆக்கு!

அண்ணல் செம்மல்  அறவழி தேர்க!
அன்பில் என்றும் அவர்வழி வாழ்க!
பிறப்பது எல்லாம் இறப்பதற் கல்ல
சிறப்பது வாழ்க செயல்களில் நின்று.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment