பெண்ணென்றும் மயங்கித்தான்
பின்னே நீயும் வந்தாயோ!—என்னை
மண்ணென்றும் எண்ணித்தான்
தின்னாறத் துணிந்தாயோ!
என்னென்றும் அறியாமல்தான்
என்னையும் தொடர்ந்தாயோ!—பழைய
பெண்ணென்றும் நம்பித்தான்
உன்னைப்பிழை முனைந்தாயோ!
உனைஈன்ற ஒன்றுதானே எனக்கும்
உரியதென்றும் அறிவிலையோ!--அடே
ஈன்றாளை எண்ணாமல் நீசா
என்னைஏன் வாசம் கொண்டாய்?
போகத்தின் பொருளோ காமப்
போதைக்கும் உருவோ நான்?—அந்த
மனைவியிடம் அறியா மாமிச
சுவையென்ன கொண்டேன் நான்?
பாரதியின் பாசறையில் நான்
பயின்று வந்த புயலென்றும்—புதுமைச்
சாரதியாம் பாரதியின் தேர்
பார்த்தி என்றும் அறியாயோ!
கண்ணீரே கோலமென அந்தப்
பேதையல்ல கீசகனே—புரட்சிப்
பெண்ணெனப் புறப்பட்ட பாரதி
புதுமைப்பெண் நானே காண்!
அழுகையின் அடையாளம் தான்
அந்நாளின் பெண்ணென்பார்---இன்று
அவளருமையின் காப்பாக
அங்கமெல்லாம் ஆயுதம்தான்.
தொலைக் காட்சித் தொடர்காணும்
விலைக் காட்சிப் பெண்ணோநான்?—அவள்
அழுகையைக் காசாக்கும் குடும்ப
அவலத்தின் சின்னமோ நான்?.
வளையல்கள் கொஞ்சும் மங்கை
வலிமை கற்றேன் பாரதியால்!—பாவி
வர்மக்கலை அறிந்த என்னை
வதைக்க உன்னை வைத்தாயே!
அன்னையவள் வடிவம் கொண்ட
பெண்ணையினி மதிக்கா விட்டால்—அவள்
கண்ணீரால் கரைய மாட்டாள்.
செந்நீரால் தலை முடிப்பாள்.
கொ.பெ.பி.அய்யா.

No comments:
Post a Comment