Tuesday, 20 June 2023

ஒரே இரத்தம்.



ஒரே இரத்தம்.


பிறந்த பொழுதிலே பிறந்த பாசங்கள் 

வளர்ந்த பாதையில் கலைந்த வேஷங்கள்.

இரத்தம் ஒன்றிலே உதித்த உறவுகள் 

பிரிந்து சிதைவதோ அண்ணன் தம்பிகள்!


துணைக்குத் துணையாய் வாழத் தானடா!

நினைத்துப் பெற்றாள் அன்னை அவளடா!

அண்ணன் தம்பியாய் இணைந்த உறவுகள் 

மண்ணு வாசல்களாய் பிரிந்ததும் ஏனடா!


உரிமைகள் மாறும் மண்பொருளுக் காக

பிறவிகள் பாசம் தான்பலி யாச்சோ!

பங்காளி என்றால் பகையாளி தானோ!

சங்கதி இதுவானால் சகோதரர் எதற்கோ!


தாயின் மார்பிலே குடித்த பாலுக்கு 

தன்னுரிமைச் சண்டைகள் செய்தோமா!

தாயின் வயிற்றிலே வாழ்ந்த  கருவறை,

 தனித்தனி பங்கும் பிரித்தளந் தோமா!


ஒற்றுமை சொல்லியே தாய் ஊட்டி வளர்த்தாள்.

வேற்றுமை இன்றியே விளையாடி மகிழ்ந்தோம்.

நாய்களின் குணமோ தெருச்சண்டை ஏனோ!

தாய்ப்பால் இரத்தம் சிந்திட லாமோ!


குடும்பங்கள் ஆனது குலம் பெருகத் தானே!

கோடுகள் பிரிக்கும் பாகங்கள் எதற்கோ!

தாயவள் போலவே தாரமும் அணைத்தால்

 சேய்களாய் மீண்டும் சோதரர் ஆவோம்.


கொ.பெ.பி.அய்யா.



 





 


No comments:

Post a Comment