Thursday, 25 October 2018

நாளை நமதல்ல.

நாளை என்பது சமாதானமல்ல.

நாளை என்பதும் சமாதானமல்ல.

நாளை என்பது சமாதானமல்ல.
கோழையின் நழுவலே நாளை எனும் சொல்லே.
பாலைக் வனத்தில் நீர் தேடல் போலே
நாளை என்பதும் கானல் நீர் தானே.

வாய்ச்சொல் வீரன் வாய் மொழி வாக்கு.
மாயமான் மாரீசன் பொய் வழி போக்கு.
தேனாய் ஒழுக்கும் தான்பேசும் அடுக்கு
தானாய் விழுங்கும் மீன்பாயும் வழுக்கு.

எல்லாம் அறிந்தவன் என்பவன் கூற்று
வல்லான் அறிவும் மழுங்கிடும் மாற்று.
நல்லவன் போன்ற நாடகப் பேச்சு.
நம்பினால் ஆண்ட நாடும் போச்சு.

கற்றதும் மற்றதும் கலைகளில் தெளிக.
உற்றதும் பெற்றதும் நிலைகளில் புரிக.
செத்ததும் உத்ததும் உணர்வினில் அறிக.
முத்ததையோ சொத்தையோ முனைவினில் முடிக.

கொ.பெ.பி.அய்யா.

Pitchiah Kpp at 23:48
சின்ன வயசு உறவுகள்.

என்னமோ தெரியல 
இன்னமும் மறக்கல.
சின்ன வயசு உறவுகள்
நெஞ்ச விட்டு அழியல.

பள்ளிக் காலம் பழகிய
கள்ளம் போல் அரும்பிய
உள்ளம் ரெண்டு நெருங்கிய
வெள்ளை க்காதல் மறக்கல.

அண்ணன் தம்பி பிறவிகள்
வண்ணம் இல்லா உறவுகள்
ஒன்று பட்ட பரிவுகள் 
துண்டு பட்டும் அழியல.

வாண்டுகளாய் நண்பர்கள்
கூண்டு விட்ட அன்பர்கள்
ஆலமர ஊஞ்சல் ஆட்டி 
ஆடியதும் மறக்கல.

பாலினம் வேற்றுமையை
வாலிபக் கதைகளை
தோழமை அரட்டைகள்
கேளிக்கை அழியல.

பள்ளி செல்ல மறுத்ததும்
துள்ளி ஆட துடித்ததும்.
வில்லர்களாய் விடலைகள்
அள்ளியதும் மறக்கல.

பள்ளிப் பாடம் பிடிக்கல.
வீட்டுப் பாடம் முடிக்கல.
வாத்தியாரு பயத்தில
ஓட்டம் இன்னும் அழியல.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment