Sunday, 1 February 2015

இதுதான் உலகம்.

இதுதான் உலகம்.

அப்படி இப்படி எப்படி யானாலும்
தப்படி ஆகிடக் கூடாது--உமது
பக்கம் எதனை பழித்திழி பாடினும்
சத்தியம் விலகிடக் கோணா!

மனதுக்கு நேர்மை மனிதனாய் பார்வை
குணமது மேன்மையும் சோராது--ஞாலம்
நலமே மறுத்தது நாடகம் என்றாலும்
பொல்லன வென்றுமே தீர்!

பண்பில் பழமையும் பார்த்து நடப்பதில்
துன்பம் உலகினில் வாழாது--மெய்யது
அன்பினை ஏய்க்கும் அடிமை அரசியல்
தொண்டுக்கு வீணாகிக்  காயா!.

பொறுமை வறுமை பூமியில் நேர்ந்து
சிறுமை கொடுமை நீளாது.--உலகம்
உண்மை மறைத்து உடன்பட மாறினும்
திண்மை துறந்துயிர் வாழா!

ஒளிக்கப் பழகும் வெளிப்படை வாழ்க்கை
வழக்கினில் இனியும் நேராது--உழு
சேறுடன் தோய்ந்த செழிமழை சேர்க்கை
வேருடன் போன்றடி ஆறா!

நல்லவன் போலும் வெள்ளை உடுப்பவன்
பொல்லவன் பொய்யும் புரியணும்--மொழியில்
வல்லவர் எவரும் நல்லவர் இல்லவர்
சொல்லினி மாயம் பேணா!.

சீறிடும் நாகமும் தீண்ட மறந்திடின்
யாரெவர் கண்டதை அஞ்சுவர்--நேரது
கோபமென் பதைநீ காட்டா திருந்திடின்
கோமாளி அன்றில் வேறோ!

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment